Tuesday, April 12, 2011

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 3 - இழவு வீட்டில் வாக்குக் களவாடியவருக்கா? மீண்டுமா?

தமிழகத் தேர்தல் 2011 - யாருக்கு வாக்கு? - 3

இழவு வீட்டில் வாக்குக் களவாடியவருக்கா? மீண்டுமா?

அன்புத் தமிழ்ச் சொந்தங்களே


விடுதலை இந்தியாவில் மூன்று இனங்கள் இந்தியாவின் அண்டை நாடுகளில் பிரிந்து வாழ்ந்தன, பஞ்சாபியர், வங்காளியர். வங்காளிகள் மதத்தின் பேரால் பிரிக்கப்பட்டு, பின்னர் இந்திராவின் துணிவால் தனக்கென ஒரு நாடும் பெற்றனர்.

பஞ்சாபியரின் உணர்ச்சித் தவறு அவரின் விடுதலை வேட்கைக்கு முற்றுப் புள்ளியானது.

நம் தமிழ் இனம் விடுதலைக்கு முன்னரே இரு நாடுகளாகப் பிரிக்கப்பட்டோம். விடுதலை இந்தியாவில் சமுக ஏற்றத் தாழ்வுகள் இருப்பினும் கூட அரசியல் உரிமைகள் பெற்றே வாழ்கிறோம்.

அங்கும் இங்கு நடக்கும் ஓரிரு அதிகார வர்க்கத் தவறுகள் அரசியல் தவறுகள் ஆகாது. அவற்றைக் களை எடுப்பது இன்னும் சாத்தியமே. நம் இனம் ஒன்று பட்டிருந்தால்.

பல்லாண்டுகளாக நடைபெறும் தமிழ் இனப் போராட்டத்தில், இந்திய அரசு, இந்திய அரசுக் கட்டிலில் அமர்ந்திருந்தவர் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தடுக்கவில்லை என்ற கறை இந்திய அரசின் மேல் படிந்துள்ளது என்பதே இன்றைய நிஜம்.


2009 பாராளுமன்றத் தேர்தலில், அதுவரை தமிழ் எதிரிகளாக இருந்தவர்கள், சந்தர்ப்பவாதிகளாக மாறி நமது வாக்குகளைக் கவர்ந்தார்கள். கவர்ந்து வெற்றி பெற்றவர்கள் இரு ஆண்டுகளாகச் சாதித்தது என்ன?

ஈழ மக்களுக்காக எத்தனை முறை பாராளுமன்றத்தை முடக்கினார்கள்?

2011 தேர்தலில் ஈழத்தைப் பற்றிப் பேசக் கூட தயங்குவது மட்டுமல்லாமல், ஈழ ஆதரவே வேண்டாமென அண்ணன் வைகோவை அம்போ வென அவிழ்த்து விட்டனர். நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் கயமையை மீண்டும் ஒரு முறை நடத்திக் காட்டியுள்ளனர்.

நாம் தமிழர் தலைவர் சீமான், மற்றும் அயல்நாட்டில் வாழ் தமிழ் அன்பர்களின் பேராயக் கட்சி எதிர்ப்பில் ஓர் நியாயம் உள்ளது.

காயம் பட்ட நமது உள்ளங்கள் ஆறும் வகையில் இன்னும் பணிகள் ஆற்றப்படவில்லை.

2009ல் இழவு நேரத்தில் நமது வாக்குகளை களவாடிய அதிமுக, நமது வாக்குகளை இழந்து பல தொகுதிகளில் தோல்விக்கு உள்ளான பேராயக் கட்சி இவற்றில் எவருக்கு இம்முறை ஓட்டுப் போடுவது?

பேராயக் கட்சி போட்டியிடும் இத் தொகுதிகளில் நாம் தமிழர் வெற்றி பெறும் வகையில் வியூகம் அமைத்திருந்தால் எமது முதல் ஓட்டு சீமானுக்கே!!!

இன்றைய நிலையில் சீமானுக்குச் செல்லும் ஒவ்வொரு ஓட்டும் இழவு வீட்டில் வாக்கைக் களவாடியது மட்டுமன்றி, அவர் உறவையும் இன்று ஒட்டு மொத்தமாக அறுத்துக் கொண்ட செல்வி செயலலிதா முதல்வராக வாய்ப்பாக அமையும் என்பதை அரசியல் பாலகரே அறிவர்.

http://kavise.blogspot.com/2011/04/2011-1_10.html

இத் தேர்தலில் சோனியா ஈழச் சிக்கலைப் பற்றி குறிப்பிடுவதைத் தவிர்க்கவில்லை. இந்தத் தேர்தலில் நாம் காங்கிரசிற்கு வாக்களித்தாலும் அவர்கள் ஏமாற்ற மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் நான் அறிவேன், இருப்பினும் ஏமாற்றும் செயலலிதா, இன்னும் வாய்ப்பிருக்கும் சோனியா, இருவரில் எவர் ஈழத் தமிழருக்கு சாதிக்க இயலும் என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்.

பேராயக் கட்சி இழக்கும் ஒவ்வொரு தொகுதியும், செல்வி செயலலிதா ஆட்சிக்கட்டிலில் ஏறச் செய்யும் படிக்கற்கள் என்பதை என்னைப் போல் நீங்களும் உணர்ந்தே இருப்பீர்கள்.

மதிமுக, நாம் தமிழர் போன்ற தமிழ் உணர்வுக் கட்சிகள் அதிமுகவிற்கு மாற்றாக வரும் வரை இந்த நிலை நீடிக்கும்.

பேராயக் கட்சியின் தமிழ் எதிரிகளை அண்ட விடாதீர்கள். பேராயக் கட்சியின் வேட்பாளர்களில் தமிழ் எதிரிகளை அடையாளம் கண்டு அவர்களை தோற்கடியுங்கள். அடையாம் காணப் பெற்ற அந்த ஒரு சில தொகுதிகளில் நாம் தமிழர் இயக்கத்தின் போர் வாள்களை வெற்றி பெறச் செய்யுங்கள்.

அந்த அடையாளம் காணப்பட்ட ஒரு சில தமிழ் எதிரிகள் தவிர மற்ற பேராயக் கட்சியினரை “கை” சின்னத்தில் ஆதரித்து, “இழவு வீட்டில் வாக்குக் களவாடி இரண்டு வருடங்களாக ஏமாற்றிய” செல்வி செயலலிதா ஆட்சிக் கட்டிலில் ஏறுவதைத் தடை செய்வோம்.

பேராயக் கட்சி போட்டியிடும் தொகுதிகளில்



1. தமிழ்/தமிழர் எதிரி என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட பேராயக் கட்சி வேட்பாளர்கள் தோற்கடிப் பட வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இந்த ஒரு சில தொகுதிகளில் மட்டும் வெற்றி வாய்ப்புள்ள நாம் தமிழர் வேட்பாளர்களுக்கு வாய்ப்பளியுங்கள்.

2. மற்ற அனைத்துப் பேராயக் கட்சி போட்டியிடும் இடங்களில் “கை” சின்னத்தில் வாக்களியுங்கள். பேராயக் கட்சியானாலும் தமிழ்/ தமிழர் ஆதரவும் அவர் வெற்றிக்குத் தேவை என்பதை புலப்படுத்துங்கள்.

சிந்திப்பீர் செயல்படுவீர்.

நட்புடன்

.கவி.

No comments:

Post a Comment